எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். கடந்த 1989-ல் தொடங்கியது எனது எழுத்துப்பணி. மின்மினியில் ஓராண்டு. 'வண்ணத்திரை'யில் நான்காண்டு. 'குமுதம்' (ஒப்பந்த அடிப்படையில்) நான்காண்டு, 'குங்குமம்', 'முத்தாரம்', 'பேசும்படம்', குங்குமச்சிமிழ்', 'சினிக்கூத்து', 'கல்கி', "திரைச் சிற்பி', 'ரஜினி' என பல முன்னணி பத்திரிகைகளில் சுதந்திரமான பத்திரிகையாளனாக எழுத்து பயணம் தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி 2006 முதல் ‘டி-சினிமா'வின் பொறுப்பாசிரியர் பணி. இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். பத்திரிகையுலக ஜேம்ஸ் பாண்டு அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களை டி. சினிமாவுக்காக சந்தித்தபோது, பக்கத்து இலைக்குப் பாயசமாய் அவரது பதிப்பகத்தில் எழுத வாய்ப்பு கேட்டேன். “என்னென்ன புத்தகம் எழுதி வெச்சிருக்கீங்க சொல்லுங்க” என்றார். பெரியார் 100, காமராஜர் 100, அண்ணா 100, கலைஞர் 100, எம்.ஜி. ஆர். 100, சிவாஜி 100, ரஜினி 100, கமல் 100 என்று பட்டியலிட்டு இதில் எது சொன்னாலும் எழுதிவிடுகிறேன்" என்றேன். "அந்தப் பட்டியல்ல கலைவாணர் 100, கண்ணதாசன் 100 என பத்து புத்தகமாக எழுதி கொடுங்க என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். உடனே அட்வான்ஸாக ஒரு காசோலையும் கொடுத்து தொடர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரது மனிதநேயத்தைக் கேள்விபட்டிருந்தேன். இன்று கண்முன் காண்கிறேன்.” இப்படிப்பட்ட நல்ல இதயம் எல்லா நலமும், எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என இறைவனிடம் கோரிக்கை வைத்தேன். -சபீதாஜோசப்